மலரும் மாலையும் திருவள்ளுவர்

      மலரும் மாலையும் திருவள்ளுவர்

                  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

 முன்னுரை

உலகப் பெரியார் திருவள்ளுவர், ஒப்பின்றிச் சிறந்து விளங்கியவர். இவரின் நூலான உலகப் பொதுமறை (திருக்குறள்) பற்றியும், திருவள்ளுவர் பற்றியும்  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

கவிதைக்கான இலக்கணம் 

உள்ளத் துள்ளது கவிதை- இன்பம் 

உருவெ டுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை 

தெளிந்து ரைப்பது  கவிதை 

உள்ளத்தில் உள்ள கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் அழகான கருவி கவிதை. அக் கவிதையை படிக்கும் போதும் எழுதும் போதும் மக்கள் மனதில் இன்பமாக உருவெடுக்கின்றது. தெள்ளத் தெளிந்த செந்தமிழில்  உண்மைகளை தெளிவாக எடுத்துரைப்பது கவிதை என்று கவிதைக்கு இலக்கணம் கூறுகின்றார்.

தெய்வநூல் 

இம்மை மறுமையின் - பயன்கள்

     எவருமே யடையச்

செம்மை நெறியினை - விளக்கும்

     தெய்வ நூல் செய்தோன்.

இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் பயன்தரக் கூடிய செம்மையான வாழ்வியல் கருத்துக்களை தருகின்ற (திருக்குறள் ) தெய்வ நூல் செய்தோன்.

சான்று

(சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 

இம்மையும் இன்பம் தரும் ) குறள் 98

இனிமையான சொற்களை நாம் பேசினால் அது இப்பிறப்பிலும் மறுபிறப்பும் இன்பம் தரும்.


குற்றம் நீக்க வந்தோன்;

வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல

     வாழ்வை ஆக்க வந்தோன்;

ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு

     உயிரை ஊட்ட வந்தோன்.

குற்றங்களை போக்கும் வழி முறைகளையும், நல் வாழ்க்கை நெறிகளையும், மனித ஒழுக்க முறைகளை தனது நூலில் கூறி தமிழ் மக்களுக்கு தமிழ் மொழிக்கும் உயிர் ஊட்டும் விதமாக அறம் கூறும் அற நூலை செய்தோன்.

நாவலர் கோமான்

தொன்மை நூல்களெல்லாம் - நன்கு

     துருவி ஆராய்ந்து,

நன்மை தீமைகள் வகுத்த

     நாவலர் கோமான்.

               தொன்மையான பழம்பெரும் நூல்களை நன்கு ஆராய்ந்து மனித குலத்திற்கு நன்மை தீமை கருத்துக்கள் எவை என பகுத்து தனது நூலில் வகுத்துக் கூறிய புலவர்களின் மன்னன். 

பொய் சொல்லா புலவன் 

எதை மறந்தாலும் - உள்ளம்

     என்றுமே மறவாப்

பொதுமறை தந்த - தேவன்

     பொய் சொல்லாப் புலவன்.

        உலகில் எதை மறந்தாலும் பொய் சொல்லா புலவரே ! நீ தந்த ( உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய பல கருத்துகளை தரும்) உலகப் பொதுமறையை(திருக்குறளை) என்றும் உள்ளம் மறவாது..

தர்ம நூல் செய்தோன்

 அறிவின் எல்லை கண்டோன் - உலகை

     அளந்து கணக்கிட்டோன்;

தறியில் ஆடை நெய்தோன் தமிழில்

     தரும நூல் நூற்றோன்.

       உளவியல் அறிவியல் என பல தளங்களில் பகுத்து ஆராய்ந்தும், உலகினை  அளந்து கணக்கிட்டும், தறியில் செய்து ஆடையை அணிந்து தமிழில் ஒரு அற நூலான தர்ம நூலை இயற்றினார்.

சமூக ஒற்றுமை 

சாதி ஒன் றேயாம் - தமிழர்

     சமயம் ஒன்றேயாம்

நீதி ஒன்றேயாம் - என்று

     நிலை நிறுத்தி நின்றோன்

உலக மக்கள் அனைவரும் மனிதன் என்ற  ஒற்றை ஜாதி தான், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை போல் தமிழ் மக்கள் அனைவருக்கும் சமயம் ஒன்று தான், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் நீதி ஒன்றே தான், என்று பல சமூக ஒருமைப்பாடு கருத்துக்களை  உலகப் பொதுமறை என்னும் நூலில் கூறிச் சென்ற வான்புகழ்  கொண்ட வள்ளுவரே உன்னைப் போற்றி வணங்குகின்றேன்.


கருத்துகள்

கருத்துரையிடுக